நெல்லை அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

                


           நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ராமசாமி கோவிலில் பழமையான கல்வெட்டு இருப்பதாக திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் மைய இயக்குனர் மாரியப்பன் சேரன்மகாதேவி தமிழ்ப்பேரவை செயலாளர் பாலு மற்றும் மைய நிர்வாகிகள் ராஜேந்திரன்  நந்தினி அனுஷா தங்கம் சூர்யா ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கல்வெட்டு கூடுதல் ஆய்வுக்காக மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்டது இதில் கல்வெட்டில் உள்ள வாசகம் விவரங்கள் கிடைத்துள்ளன.


இக்கோவில் பாண்டிய மன்னனான பராந்தக வீரநாராயணனால் ( 863-904)  கட்டப்பட்டது. கோவிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. கல்வெட்டு கோவில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு ராசராச சோழன் சோழ மன்னனின் மகன் ராசேந்திர சோழன் ( 1012-1044) மூன்றாவது ஆட்சி ஆண்டு காலத்தில் அதாவது 1015-ம் ஆண்டில் வெட்டப் பட்டது. இதன் வாயிலாக கல்வெட்டு ஆயிரத்து ஆறு ஆண்டுகள் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது

கல்வெட்டில் ஊரின் பெயர் முள்ளிநாட்டு பிரம்ம தேயமான சோழ நிகரிலி  சதுர்வேதி மங்கலம் என்றும் இறைவனை நிகரிலி சோழ விண்ணகர உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு நந்தாவிளக்கு ஒன்று தானமாக கொடுக்கப்பட்டு அதனை எரிக்க நெய்யும் தானம் வழங்கப்பட்ட செய்தியை குறிப்பிடுகிறது. இதில் விளக்கில் ஆழாக்கு நெய் நெய்யினை முட்டாமல் அதாவது அளவுக்கு அதிகமாக ஊற்றாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு உதவி செய்தமைக்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021