உலக தாய்ப்பால் தினம்: 01.08.2021
01.08.2021
இன்று உலக தாய்ப்பால் தினம்: குழந்தைகள் வாழ்வின் அடித்தளம் தாய்ப்பால்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாக கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியா உள்பட 170 நாடுகளில் 1991 முதல் அமலில் உள்ளது. ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது தவறாகும். ஒரு தாய் குழந்தையை பிரசவித்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையாக இருந்தால் குழந்தை பிறந்து 2 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்து.
குழந்தை பிறந்த உடன் மஞ்சள் நிறத்தில் வெளிப்படும் பால் கொலஸ்ட்ரோம் என்று அறியப்படுகிறது. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை மஞ்சள் நிற பாலில் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் கூடுதல் ப்ரோட்டீன் போன்றவை அடங்கியுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது அவர்களுடைய மன நிலை அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும். குழந்தையை மாரோடு அனைத்து கொடுக்கப்படும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு வளர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாறாக மன அமைதி இல்லாமல் வெறுப்புடன் தாய் குழந்தைக்கு பாலூட்டும்போது தாய்ப்பாலின் அளவு குறைந்து குழந்தையை மன ரீதியாக பதிப்பதாகவும் கூறப்படுகிறது.
வேலைக்குச் செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்மார்கள் பசும் பாலை புட்டியில் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இது மிகவும் தவறான செயலக கூறப்படுகிறது.
மாறாக தாய்ப்பாலை புட்டியில் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நன்றாக கழுவிய சுத்தமான பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்படும் தாய்ப்பாலானது ஒரு அறையில் சாதாரண வெப்பநிலையில் 6 முதல் 8 மணிநேரமும், அந்த பாலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது 18 முதல் 24 மணிநேரம் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
தாய்ப்பால் கொடுத்த பிறகு குழந்தையின் பின்புறத்தை மெதுவாக தடவிகொடுப்பது நல்லது இந்த செயல் குழந்தைக்கு வாந்தி ஏற்படுவதை தவிர்க்கும். இரவு நேரங்களிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். வரும் காலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு செயற்கை உணவுகளை தவிர்த்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சில பெற்றோர் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தங்களுடைய உடல் அழகு பாதிக்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் தவறாகும். தாய்ப்பாலின் மூலம் பெற்றோருக்கும், குழந்தைக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து அரசு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே குழந்தை பாதுகாப்பு அமைப்பாளர்களின் கருத்து.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு 500க்கும் அதிக கலோரி குறைந்து கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் எடை குறைய இது முக்கிய பங்கு வகிக்கும். கூடுதல் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சக்கரை நோய், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை தடுக்கலாம்.மேலும் மருத்துவர்கள் கூறுகையில், ‘‘தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கொடிய நோயான கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களின் உடலில் ஒக்சிற்றோசின் என்ற சுரபி கூடுதலாக சுரக்கிறது. இதன் மூலம் கர்பப்பை சுருங்கி தாய்மார்களுக்கு அடுத்த பிரசவத்திற்கு தங்களை தயார் செய்ய உதவுகிறது’’ என்றனர். குழந்தைக்கு... தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளச்சிக்கு தேவையான கொழுப்பு, சக்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்றவை சரியான அளவில் கிடைக்கிறது.
தாய்ப்பால் குடிப்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கிறது. சீக்கிரத்தில் ஜீரண சக்தி தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கிடைக்கிறது. மேலும் குழந்தைகளின் உடல் உறுப்புக்கள் வளர்ச்சியடைகின்றன. பல விதமான தோற்று நோய்களில் இருந்தும் தாய்ப்பால் குழந்தையை பாதுகாக்கிறது. மேலும் காதுவலி, மூச்சுக்குழாய் சம்பந்தமான நோய்கள், அலர்ஜி போன்றவையை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் கூடுதலாக தாய்ப்பாலில் உள்ளது. பிரசவ காலம் முன்பாக பிறந்த குழந்தைகளுக்கு மிக முக்கிய மருந்தாக தாய்ப்பால் அறியப்படுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக