ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (ALBERT EINSTEIN)

 


பெயர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பிறப்பு : 14-03-1879

இறப்பு : 18/04/1955

பெற்றோர் : ஹேர்மன் ஐன்ஸ்டீன், போலின் கோச்

இடம் : ஜெர்மனி

வகித்த பதவி : கண்டுபிடிப்பாளர்

 

 

வரலாறு:-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு :

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில், 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஹேர்மன் ஐன்ஸ்டீன் (Hermann Einstein), தாயாரின் பெயர் போலின் கோச் (Pauline Koch).

 

👉 இவரது தந்தை ஹேர்மன் ஐன்ஸ்டீன், ஒரு மின்வேதியியல் சார்ந்த தொழில் நிலையத்தை நடத்தி வந்தார்.

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூன்று வயது வரை பேசாமல் இருந்தார். இதனால் இவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர்.

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுவனாக இருந்தபோது ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடச்சாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்று வந்தார்.

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பேசுவதற்கு தாமதமாகியதால், வகுப்பில் பின் தங்கிய மாணவனாக இருந்தார். மேலும், பள்ளிக்கூடத்தில் மந்தத்தன்மையான, அமைதியான சிறுவனாக காணப்பட்டார். எந்த விளையாட்டிலும் ஈடுபாடு இல்லாதவனாய் ஒதுங்கியே இருந்தார்.

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எதையும் ஆமை வேகத்தில்தான் செய்து முடிப்பார். எந்த கேள்விக்கும் உடனடியாக பதிலளிக்கமாட்டார். இதனால் ஆசிரியர்களுக்கு ஐன்ஸ்டீனை பிடிக்காமல் போனது. இவருக்கும் வகுப்பறைகள் பிடிக்கவில்லை.

 

👉 ஐந்து வயதில் ஒரு சமயம் தகப்பனார் காந்தத் திசை காட்டும் [Magnetic Compass] கருவி ஒன்றை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு கொடுத்தார்.

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அது ஒரு விந்தைக் கருவியாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் இருந்தது. தட்டை எவ்விதம் சுற்றித் திருப்பினாலும், காந்த ஊசி எப்போதும் ஒரே திசையைக் காட்டியது.

 

👉 அவ்வாறு நிகழ்வதற்குச் சூழ்வெளியில் ஏதோ ஒன்று ஊசியை இயக்கி வருவதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைத்தார். அது என்னவாக இருக்கும்? என்று யோசித்தார்.

 

👉 அந்த வயதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சிந்தனை தூண்டப்பட்டு அண்டவெளியை நோக்கிச் சென்றது! அதுவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பின்னால் அண்டவெளி, காந்த சக்தி, புவிஈர்ப்பு விசையை பற்றி ஆழ்ந்து சிந்திக்க அடிகோலாக அமைந்தது.

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இளமைக்காலம் :

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பள்ளியில் பல சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் ஆசிரியர்கள் திகைத்தனர்.

 

👉 மகன் எழுத, பேச முடியாமல் பத்து வயது வரை இருந்ததற்கு ஏதோ ஒரு நோயின், தாக்கம்தான் என அவரின் தாய் கருதினார். 'எந்த உத்தியோகம் அவனுக்கு உகந்தது' என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தந்தை ஒரு சமயம் கேட்டதற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர், 'ஆல்பர்ட் எதிலும் உருப்படியாக சாதிக்கப் போவதில்லை' என்று சாதாரணமாக சொன்னாராம்!

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது 12வது வயதிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினர்கள் இருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்கள்.

 

👉 சிறுவயதிலேயே ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு கணிதத்திலும், அறிவியலிலும் அளவற்ற ஆர்வமும், பகுத்தறியக்கூடிய திறனும் இயற்கையாகவே அமைந்திருந்தது.

 

👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 14 வயதில் இருந்து வார்த்தைகளாலும், சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்திப்பார். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

 

👉 இவரது தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், 1894-ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, முதலில் இத்தாலியிலுள்ள மிலான் நகருக்கும், பின் பேவியா என்னுமிடத்திற்கும் இடம் பெயர்ந்தது.

 

👉 ஆனால், அவர் மியூனிக்கிலேயே பாடசாலை படிப்பை முடிப்பதற்காக தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ள பேவியா சென்றார்.

 

👉 மீதமுள்ள பாடசாலை படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 16 வயதில் சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வில் தோற்றுப் போனார்.

 

👉 'நீ மிகவும் மோசமாக தேர்வு எழுதியிருக்கிறாய். கணிதம், பௌதிகம் இரண்டைத்தவிர, வேறு எந்த பாடத்திலும் தேர்வு பெறவில்லை. மொழிகளில் உனக்கு போதிய அறிவு இல்லை. இந்த நிலையில், நீ இங்கு சேர விரும்புகிறாயா? இது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சி பள்ளிக்கு சென்று படித்து தேர்ச்சி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்று வந்தால், நான் உன்னை சேர்த்துக்கொள்கிறேன்' என்று கல்லூரியின் முதல்வர் கூறிவிட்டார். ஆனால், அடுத்த ஆண்டே ஐன்ஸ்டீனை சேர்த்துக்கொண்டது அந்த பல்துறை தொழிற்கல்லூரி.

 

👉 அதன்பின் இயற்பியலில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவையே ஐன்ஸ்டீன் டாக்டர் பட்டம் பெறுவதற்கு உதவின.

 

👉 இச்சமயத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு நாடற்றவரானார்.

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் திருமண வாழ்க்கை :

 

👉 1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன் படித்த செர்பிய பெண்ணொருவரை கண்டு காதல் கொண்டார். 1901ம் ஆண்டு இவர் சுவிட்சர்லாந்தின் குடியுரிமையை பெற்றார்.

 

👉 ஐன்ஸ்டீன் மாணவராக இருந்தபோதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறி, இவருடன் பணியாற்றிய பெண் விஞ்ஞானி மிலவா மாரிக்- 1903ஆம் ஆண்டு திருமண செய்து கொண்டார். அவர்களுக்கு ஹான்ஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Hans Albert Einstein), எட்வர்ட் (Eduard) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது.

 

👉 ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை பதினொரு ஆண்டு காலமே நீடித்தது. 11 ஆண்டு கால வாழ்க்கைக்கு பின் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தன் பிள்ளைகளையும் அழைத்து சென்றுவிட்டார். மாரிக் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோர் 1919ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்தனர்.

 

இரண்டாவது திருமணம் :

 

👉 தனக்கு ஒரு துணை வேண்டி, தம் தேவைகளை அறிந்து தாயுள்ளத்தோடு நடந்து கொள்ளும் ஒரு பெண்ணை ஐன்ஸ்டீன் தேடினார்.

 

👉 பின் ஐன்ஸ்டீன் அவருடைய உறவினரான எல்சா லோவென்தாலை 1919ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர் சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு 1936ல் மறைந்தார். இந்த தம்பதியர் இரண்டு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்தனர். அவர்கள் மார்கோட் மற்றும் இல்ஸ் ஆவர்.

 

👉 தம் அறிவாற்றலைக் கண்டு காதலித்துத் திருமணம் செய்த மிலேவா பிரிவும், தம் உறவுக்காரப் பெண்ணான எல்சாவின் மறைவும் ஐன்ஸ்டினை யோசிக்க வைத்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமது எதிர்கால வெற்றிகளுக்கு தடைக்கற்களாக இருப்பதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார். இனி எஞ்சிய காலத்தை தனியாகவே வாழ்ந்து முடிப்பது என்று ஐன்ஸ்டீன் உறுதி பூண்டார்.

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு :

 

👉 படிப்பு முடிந்ததும் இவருக்கு கற்பித்தல் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவருடைய தந்தையின் மூலம், 1902ல் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவி பரிசோதகராக வேலை கிடைத்தது.

 

👉 அங்கு கருவிகளை பற்றி விளக்குவதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டார். மேலும், அங்கு கருவிகளுக்கான காப்புரிமை விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை.

 

👉 1905ல் ஐன்ஸ்டீன் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் பௌதிக விஞ்ஞானத்தில் Ph.D. பட்டதாரி ஆனார். கண்ணுக்கு புலப்படாத அணுவை பற்றியும், பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தை பற்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார்.

 

👉 அதுதான் சார்பியல் கோட்பாடு. அந்த கோட்பாட்டின் மூலம் அவர் உலகிற்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்...

 

E=mc2

 

👉 எந்தவொரு பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும்போது அது ஒரு குறிப்பிடத்தக்க சக்தியை கொண்டிருக்கும் என்று கூறினார். விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.

 

👉 1905ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் மட்டுமல்ல, அறிவியல் உலகிற்கே அதிசயங்களை வழங்கிய ஆண்டு. ஒளிமின் விளைவு, பிரௌனியன் இயக்கம், சிறப்பு சார்பு கோட்பாடு, E=mc2 👉 என்ற நிறை-ஆற்றல் சமநிலை விதி என இயற்பியல் உலகை அதிர வைத்த ஐன்ஸ்டீனின் பல முக்கியமான படைப்புகள் இந்த ஆண்டில்தான் வெளியாகின.

 

👉 ஐன்ஸ்டீன் ஒரு யூதர் என்பதால் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் இவரது கருத்துக்களை கடுமையாக எதிர்த்தனர். மற்றொரு தரப்பினருக்கு தங்களது பழைய கோட்பாடுகளில் இருந்து விலகி வருவதில் தயக்கம் ஏற்பட்டது. ஆனால், ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் எல்லாம் வெவ்வேறு தருணங்களில் நிரூபணமாகின.

 

👉 தொடர்ந்து பல கோட்பாடுகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வந்த ஐன்ஸ்டீனுக்கு உலகப் புகழ் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் அவருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வந்தனர்.

 

இரண்டாம் உலகப்போரில் ஐன்ஸ்டீனின் பங்கு :

 

👉 1933ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். அதன்பின் யூத பின்னணியின் காரணமாக, ஐன்ஸ்டீன் ஜெர்மனிக்கு திரும்பவில்லை. அவர் அமெரிக்காவில் குடியேறி 1940ல் அமெரிக்க குடிமகனாக ஆனார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021