சுரதா (SURATHA)
பெயர் : சுரதா
இயற்பெயர் : இராசகோபாலன்
பிறப்பு : 23-11-1921
இறப்பு : 19-06-2006
பெற்றோர் : திருவேங்கடம், சண்பகம் அம்மையார்
இடம் : பழையனூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு
புத்தகங்கள் : வார்த்தை வாசல், சாவின் முத்தம், தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986), துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976), சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு), சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
வகித்த பதவி : தமிழ் கவிஞர், எழுத்தாளர்
விருதுகள் : இராசராசன் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது,
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
சுரதா தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார். சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, மற்றும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ ஆகியவை. 100 க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச் மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார். 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது. சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற சுரதா அவர்கள், தன்னுடைய 84ம் வயதில் 19.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

கருத்துகள்
கருத்துரையிடுக