சீரடி சாய்பாபா (SEERADI SAIBABA)
பெயர் : சீரடி சாய்பாபா
வகித்த பதவி : ஆன்மிகவாதி
வரலாறு:-சீரடி சாய்பாபா !!
👉 ஒவ்வொருவரும் இந்த பூமியில் மனிதனாக பிறப்பதற்கு ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். அப்படி ஒவ்வொருவரும் புல், மரம், புழுவாக மற்றும் மேலும் பல உயிரினங்களாக பிறப்பெடுத்ததற்கு பிறகுதான் இந்த அரிய மானுட பிறப்பை எடுக்கின்றனர்.
👉 ஆனால், இம்மானுடப்பிறவியின் முக்கிய நோக்கம் என்னவென்று தெரியாமலே பலர் தவறான வழிக்குச் செல்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்த சில ஞானிகள் தோன்றுவதுண்டு. அவ்வாறு தோன்றிய அவதார புருஷர்களில் அற்புதமானவர்தான் சாய்பாபா.
ஒரு மகானாக சீரடி சாய்பாபா :
👉 சீரடி சாய்பாபா தனது பதினாறு வயதில், ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்தார். பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார்.
👉 அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் 'உடல் நிலை சரியில்லை' என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார்.
👉 அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. இவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவியது.
👉 சாய்பாபாவின் அவதாரம் என்பது ஆழ்ந்த எல்லையற்ற பெருங்கடல் போன்றது. அந்த பெருங்கடலில் மூழ்கி அனைவரும் பக்தி, ஞானம், மனப்பக்குவம் உள்ளிட்ட பல்வேறு முத்துக்களை எடுத்துப் பயன்பெறலாம். ஆனால், ஒருபோதும் அந்த பெருங்கடலின் கரையை காண இயலாது.
👉 சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டத்தின் அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத்தின்போது அவர் தம் அருகில் யாரையும் வரவிட்டது இல்லை.
👉 தியானத்தின்போது அவர் வாய், 'அல்லா மாலிக்' என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு. அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்ததுண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு. சில பக்தர்கள் தியானத்தின்போது பாபா என்ன கூறுகிறார் என்பது பற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். ஆனால், அதற்கு பாபா எதுவும் பதில் கூறவில்லை.
யாருக்கும் உபதேசம் செய்யவில்லை :
👉 ஒரு சில பக்தர்கள் பாபாவிடம், 'பாபா... உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டனர். ஆனால், சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை.
👉 பாபாவிடம் உபதேசம் பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவினார்கள். இதுபற்றி நன்கு தெரிந்திருந்த ராதாபாய் என்பவர், ஒரு தடவை தன் ஊர்க்காரர்களுடன் சீரடிக்கு வந்திருந்தார். பாபாவை பார்த்து தரிசனம் செய்தார். அந்த தரிசனமே அவருக்கு ஆத்ம திருப்தி தருவதாக இருந்தது.
👉 பாபாவின் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. சீரடி மசூதிக்குள் நுழைந்த மறுவினாடியே அவர் உள்ளம் பாபாவை குருவாக ஏற்றது. இதன் காரணமாக அவர் மனதிற்குள், பாபாவிடம் இருந்து எப்படியாவது ஏதாவது ஒரு உபதேசத்தை பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதைத் தவிர அவர் பாபாவிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
👉 சாய்பாபா, ராதாபாய்க்கு எந்த உபதேசத்தையும் அளிக்க மறுத்துவிட்டார். இது ராதாபாய்க்கு மிகுந்த வேதனையை தந்தது. பாபா உபதேசம் தரும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். சொன்னபடியே தான் தங்கியிருந்த இடத்திலேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
👉 மூன்று நாட்கள் கழிந்தன. ராதாபாய் தண்ணீர் கூட குடிக்கவில்லை. பாபாவிடம் உபதேசம் பெற்றே தீர வேண்டும் என்பதில் வைராக்கியத்துடன் இருந்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் சாய்பாபாவுக்கு தெரிய வந்தது. ஆனால், சாய்பாபா ராதாபாயை கண்டுகொள்ளவே இல்லை.
👉 அப்போது ஒரு பக்தர் சாய்பாபாவிடம், 'அவள் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால், இந்த உலகம் உங்களைத்தான் தூற்றும். எனவே, கருணை கூர்ந்து அவருக்கு ஆசியாவது வழங்குங்கள்' என்றார். அதை ஏற்றுக்கொண்ட சாய்பாபா, உடனே ராதாபாயை துவாரகமாயி மசூதிக்கு வரவழைத்தார். அவருக்கு ஆசி வழங்கி அறிவுரை கூறினார்...
👉 அம்மா... உண்மையிலேயே நீங்கள் என் தாய். நான் உங்கள் குழந்தை. ஆனால், நீங்கள் என்னிடம் உபதேசம் கேட்டு தேவையில்லாமல் உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்கிறீர்கள். என் சொந்தக் கதையை இன்று உங்களுக்காக சொல்கிறேன். கவனமாக கேளுங்கள். அப்போது உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.
👉 எனக்கு ஒரு குருநாதர் இருந்தார். அவர் மிகுந்த அன்பு கொண்டவர். அவருக்கு நான் சீடராக இருந்து நீண்ட நாட்கள் சேவை செய்தேன். அவரிடம் உபதேசம் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. இப்போது நீ என்னிடம் உபதேசம் கேட்க எப்படி ஆசைப்படுகிறாயோ... அது மாதிரிதான் நானும் அப்போது ஆசைப்பட்டேன்.
👉 ஆனால், குருநாதர் எனக்கு எந்த உபதேசமும் சொல்லவில்லை. எந்த ஒரு மந்திரத்தையும் அவர் எனக்கு கற்றுத்தரவில்லை. ஒருநாள் அவர் என்னிடம் இருந்து 'உபதேசம் பெற வேண்டும்' என்ற தீவிரத்தை அறிந்தார். உடனே என்னை அழைத்தார். மொட்டை அடிக்கச் செய்தார். பிறகு இரண்டு காசுகளை தட்சணையாக கேட்டார்.
👉 காசு என்றால் இந்த இடத்தில் பணம் என்று அர்த்தம் இல்லை. 'நம்பிக்கை', 'பொறுமை' எனும் இரண்டையும் தான் அவர் தட்சணையாக கேட்டார். இந்த இரண்டையும் நான் என் குருநாதருக்கு அளித்தேன். 'இதனால், குருநாதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 12 ஆண்டுகள் நான் என் குருநாதருடன் இருந்தேன். அந்த 12 ஆண்டுகளும் என் மீது குருநாதர் அளவு கடந்த அன்பை காட்டினார்.
👉 அவரது அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரைப் போல குருநாதர் வாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அவர் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அதை பார்க்க, பார்க்க எனக்குள்ளும் பேரின்பம் பெருகியது.
👉 சில சமயம் இரவு, பகல் பாராமல் நாங்கள் தியானத்தில் ஆழ்ந்து மூழ்கி விடுவோம். நாளடைவில் என் தியானத்திற்கு அவரைத் தவிர வேறு எந்தவொரு பொருளும் இல்லை என்ற நிலை உருவானது.
👉 குருவுக்கு பணிவிடை செய்வதை தவிர வேறு எந்த வேலையும் இல்லை என்ற நிலை சாய்பாபாவிற்கு ஏற்பட்டது. எனது ஒரே அடைக்கலம் குருதான் என்பது உறுதியானது. இதனால் என் மனம் முழுமையாக அவர் மீதே இருந்தது. இந்த உறுதியான நம்பிக்கை என்பது நான் என் குருநாதருக்கு கொடுத்த ஒரு பைசா தட்சணையாகும். மற்றொரு பைசா பொறுமை எனும் தட்சணையாகும். நான் என் குருவுக்கு மிக நீண்ட நாட்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொறுமையாக சேவை செய்தேன். இந்த பொறுமையே பிறவிப் பெருங்கடலை நீந்தி முக்தி பெற உதவும்.
👉 மனிதர்களிடத்தில் எந்த அளவுக்கு பொறுமை உள்ளதோ, அந்த அளவுக்கு அது பாவத்தையும், வேதனைகளையும் விரட்டும். பொறுமையில் ஆழ்பவன் ஆபத்துக்களை கடந்து, பயம் நீங்கி எளிதில் வெற்றி பெறுவான். ஒருவன் எந்த அளவுக்கு பொறுமையாக இருக்கிறானோ, அவன் நல்ல பண்புகள் குவிந்துள்ள அரங்கம் போல் இருப்பான்.
👉 நம்பிக்கையும், பொறுமையும் இரட்டைப் பிறவிகள். ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரட்டைப் பிறவிகள் போல் நம்பிக்கையும், பொறுமையும் இருக்க வேண்டும். இதை நீ எப்போதும் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
👉 என் குருநாதர் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக அவர் என்னை புறக்கணிக்கவுமில்லை. தாய் ஆமையானது, குட்டியினைப் பிரிந்து நீண்ட தொலைவில் இருந்தாலும், தன் அன்பை எண்ணத்தால் வளர்த்துவிடும். என் குருநாதரும் என்னிடம் அப்படித்தான் இருந்தார்.
👉 அவர் எனக்கு எந்த மந்திரமும், உபதேசமும் சொல்லித்தரவில்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி உங்களுக்கு உபதேசம் செய்ய முடியும்? யாரிடமும் நீங்கள் உபதேசத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் மனதில் என்னை நிலை நிறுத்துங்கள். உங்கள் எண்ணமும், செயலும் என்னை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டும். அப்படி என்னை நீங்கள் நோக்கினால், நானும் உங்களை நோக்குவேன்.
👉 குருவை மும்மூர்த்திகளின் அவதாரம் என்று மனதார நம்புங்கள். குருவே வழி நடத்துகிறார் என்று உறுதி கொள்ளுங்கள். அப்படி குருபக்தி உடையவர்கள்தான் உண்மையிலேயே உபதேசம் பெற்றதை போன்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள் என்று சாய்பாபா கூறினார்.
👉 அவர் தன் நீண்ட உரையை முடித்தபோது அவர் கண்கள் கருணை மழை பொழிவதாக மாறியது. ராதாபாய் கண்ணீர்விட்டார். அந்த நிமிடமே சாய்பாபாவின் அவதார சிறப்பை புரிந்து கொண்டார். உண்ணாவிரதத்தையும் கைவிட்டார்.
👉ராதாபாய் போலவே புரந்தரே என்பவரும் ஒரு தடவை உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்துக் கொண்டார். அவர் மும்பையில் இருந்து அழகிய மலர் செடிகளை சீரடிக்கு எடுத்து வந்தார். துவாரகமாயி மசூதியை சுற்றி அவற்றை நட்டு வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால் சாய்பாபா, அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
👉சாய்பாபா அனுமதி கொடுக்காததால் வேதனை அடைந்த புரந்தரே, தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தார். மூன்று நாட்களை கடந்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக