மூவலூர் ராமாமிர்தம் (MOOVALUR RAMAMIRTHAM)
பெயர் : மூவலூர் ராமாமிர்தம்
பிறப்பு : கி.பி. 1883
இறப்பு : கி.பி. 1962
இடம் : மூவலூர் கிராமம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு
வகித்த பதவி : அரசியல்வாதி
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
மூவலூர் ராமாமிர்தம் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்.
இவர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தில் பிறந்தவர்.
இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936ல் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925ல் பெரியார் (ஈ. வெ. ராமசாமி) காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938ல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. அச்சட்டம் 1947லிருந்து தேவதாசி முறையை ஒழித்தது. 1949ல் பெரியார் அவரைவிட மிகவும் வயதில் குறைந்த மணியம்மையை மணந்தது பிடிக்காமல் பெரியாரை விட்டுவிலகினார். அதன்பிறகு பெரியாரின் சீடரான சி. என். அண்ணாத்துரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளரானார். 1962ல் அவர் காலமாகும்வரை தி.மு. க ஆதரவாளராகவே இருந்தார். தமிழக அரசு, அவரது நினைவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்ற சமூகநலத் திட்டத்தை ஏழைப்பெண்கள் திருமணத்துக்கு நிதியுதவி செய்வதற்காக ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக